பெண் ஒருவரின் ஆபாசமான காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை (5) கைது செய்யப்பட்டதாக பதுளை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக பணியகம் தெரிவித்துள்ளது.
பனாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் 33 வயதான பொறியியல் படையைச் சேர்ந்த திருமணமான சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் சில காலமாக தொடர்பை வைத்துள்ள சந்தேக நபர், உறவு முறிந்த பின்னர் அவர்களது உறவின் போது எடுக்கப்பட்ட ஆபாச காட்சிகள் அடங்கிய காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது இதுவரையான விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணினி குற்றச் சட்டம் மற்றும் ஆபாச பிரசுரங்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேகநபரான சிப்பாய் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




