தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு நேற்று (6) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் தெரிவித்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து, சட்டமா அதிபரின் கடிதத்தை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபர் ஒக்டோபர் 2ஆம் திகதி அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான வழக்கை நீடிக்க முடியாது என்பதால் அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் அறிவித்தார்.
இதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், விஜயகலா மகேஸ்வரனை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனப் பிரகடனம் செய்து இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அன்றைய நிகழ்வில் விஜயகலா விடுதலைப் புலிகள் பற்றி பேசினாலும், அவரது கணவர் மகேஸ்வரன் கொலையில் தொடர்புபட்டதாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு பொதுமன்னிப்பளிக்க அவர் சம்மதிக்காததால் அவரை விடுவிக்க முடியாதுள்ளதாக அரச தரப்பினர் அடிக்கடி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




