ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்திற்குப் புறம்பாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கு மட்டுமே உரித்துடையது. ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ் சேர்க்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கேள்விக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் இருந்து ஜனாதிபதி சிறப்புரிமைகள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்புரிமை வழங்கும்போது, ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள விடயங்கள் வெட்டப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



