29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயை பலவந்தமாக கடத்திச் சென்று தடுத்து வைத்ததாகக் கூறப்படும் மீன் வியாபாரி ஒருவர் கம்புருபிட்டிய, மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மீன் வியாபாரியின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி சுமார் 6 மாதங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தாயாரையும் பொலிஸார் கைது செய்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்து வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அந்த வீட்டிலிருந்து தான் தப்பியோடிப் போனால் கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவதாகவும், தனது நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாகவும் அந்த பெண், பொலிசாரிடம் கூறியுள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டுவதாகவும், தலைமுடியை வெட்டியதாகவும் கூறியுள்ள அந்த பெண், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவர் பல தடவைகள் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, இது தொடர்பான விசாரணைகளை மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி வருணி கேஷலா போகஹவத்தவிடம் ஒப்படைத்தார்.
அதன் பிரகாரம், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் உத்தரவைப் பெற்று, சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த பெண்ணை அச்சுறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 05 மீன் வெட்டுக் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணின் நிர்வாண காட்சிகள் பதிவாகியிருந்த செல்போன் மற்றும் மெமரி கார்டுகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்களும் மொபைல் போனில் இருந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
36 வயதுடைய சந்தேக நபர் மூன்று பிள்ளைகளின் தாயாரின் உறவினர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



