2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, மட்டக்களப்பு, கொழும்பு, நீர்கொழும்பில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.
அன்றைய தினம் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றுவரை 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நிரந்தரமாக அங்கவீனமுற்றவர்கள் பலர் உள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டானாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயத்தை குறிவைத்த பயங்கரவாதக் குழு முதலில் காலை 8:45 மணிக்கு முதல் குண்டுவெடிப்பை நடத்தியது. அதைத் தொடர்ந்து அடுத்த 30 நிமிடங்களிற்குள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கொழும்பு சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்ரிலா, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
பலியானவர்களில் 45 குழந்தைகளும் 40 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
தெஹிவளையில் உள்ள சுற்றுலா விடுதியில் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் குண்டு வெடித்தது.
பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை முன்னெடுத்துச் சென்றதைத் தொடர்ந்து, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் தற்கொலைப் படை தீவிரவாதிகளில் ஒருவருமான சஹ்ரான் ஹாஷிம் குழுவினர் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என அரசு தரப்பு கூறுகிறது. எனினும், கத்தோலிக்க சமூகமும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அதை ஏற்கவில்லை.
அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என குறிப்பிடுபவர்களும் உள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முடித்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
இன்றுவரை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் தெரிவித்துள்ளது.
81 நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும், நீதி கோரும் போராட்டங்களும் இன்று நடக்கவுள்ளன.



