மன்னார், சாந்திபுரத்தில் எதிர்வீடுகளில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் எமில் நகரைச் சேர்ந்த சத்தியா என அழைக்கப்பட்ட ஆர்.கிளேட்டன் சொய்சா (35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இக்கொலை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோதலில் ஈடுபட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், பொலிஸ் நிலையம் வரை சென்று பிரச்சினை சமரசப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த வீட்டில் வசிப்பவர்களே மோதலை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தகராறில் ஈடுபட்ட நபர் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியதில் மூன்று பெண்கள் மற்றும் இருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். .
கொலை மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு பேர் பெயரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




