கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடியகல்வு பிரிவினரினால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட தேடப்படும் குற்றவாளி ஒருவர் விமான நிலைய பொலிஸாரின் காவலில் இருந்த போது தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பிக்குகளை மேல் மாகாண (தெற்கு) பொலிஸ் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
ஹெட்டிபொல பிரதேசத்தில் இருந்து விமான நிலைய பொலிஸாரிடம் செல்வதற்கு பிக்குகள் வாடகைக்கு எடுத்த காரும் அதன் சாரதியுடன் ஹெட்டிபொலவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர், போலிப் பெயரில் டுபாய் செல்ல முற்பட்ட போது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 18 ஆம் திகதி ஹங்வெல்ல உணவக உரிமையாளரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் களுமினி ரவிந்து சங்க என்பவரே குற்றம் சாட்டப்பட்டுள்ளார். .
தற்போது டுபாயில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரன் லலித் கன்னங்கரவின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்க பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிக்கு, புதிய பிக்கு மற்றும் வாகன சாரதி ஆகியோர் விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குகள் ரிட்டதெனிய, ஹெட்டிபொல ஸ்ரீ ஜய லங்காராம விகாரையின் பிரதமகுருவான பொத்தேவல இந்திரசார தேரர் மற்றும் திவுல்வெவ தீபானந்த தேரர். கார் சாரதி கே.டபிள்யூ. திலான் (27) அம்பேவெல களுபோவிட்டியனை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
கைது செய்யப்பட்ட பிக்குகளுடன் வந்த 11 வயது புதிய பிக்கு தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
லலித் கன்னங்கரவும் தானும் ஒரே அறநெறி பாடசாலையில் கற்றதால் நெருங்கிய நண்பர்கள் என விகாராதிபதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட தேடப்படும் குற்றவாளியின் பயணப்பொதிகளையும் பிக்குகளிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் OIC, பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் விமான நிலைய பொலிஸில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டதோடு, சார்ஜன்ட் மார்ச் 3 ஆம் திகதி வரை நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மற்றைய 3 பொலிசாரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



