தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த இந்திய உளவுத்துறை திட்டமிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்ததாக 2009 மே மாதம் இலங்கை இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது புகைப்படத்தையும் வெளியிட்டது.
இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது:
தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை அவரை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஊகங்கள், சந்தேகங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.
இலங்கை தமிழ் மக்களின் விடியலுக்கான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
தற்போது இந்திய எதிர்ப்பு தளமாக இலங்கையை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், சீனாவின் பிடியில் இந்தியப் பெருங்கடல் பகுதி சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து, அதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், இங்குள்ள கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று, பிரபாகரனுக்கு துணை நிற்க வேண்டும் என அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பிரபாகரனுடன் நீங்கள் பேசினீர்களா? அல்லது அவர் உங்களை தொடர்பு கொண்டாரா?
பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உண்டு. அந்த தொடர்பின் மூலம் நான் அறிந்த செய்திகளை, அவர்களது அனுமதியின் பேரில் தெரிவித்துள்ளேன்.
பிரபாகரன் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்?
உங்களை போலவே இதை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார்.
பிரபாகரனின் மனைவி, மகள் குறித்து ஏதேனும் தகவல் உண்டா?
நன்றாக நலமுடன் உள்ளனர்.
இத்தனை ஆண்டு காலம் கழித்து இப்போது இதை தெரிவிக்க என்ன காரணம்?
சர்வதேச சூழல் தற்போது கனிந்திருக்கிறது. எந்த இலங்கை மக்கள் ராஜபக்சவை ஆட்சியில் அமரவைத்தனரோ, அதே மக்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்து போராடி, ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கின்றனர். இலங்கை மக்களுக்கு இப்போதுதான் உண்மை புரியத் தொடங்கியுள்ளது. இதைவிட சாதகமாக வேறு எந்த சூழல் உருவாக முடியும்.
இந்த செய்தி இலங்கை மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி, நம்பிக்கையை கொடுக்கும். இப்போது அவர்களுக்கு யானை பலம் கிடைத்துள்ளது. அவர்கள் நிச்சயம் பிரபாகரனுக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள்- என அவர் கூறினார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் சி.முருகேசன், துணைச் செயலாளர் துரை.குபேந்திரன், இலங்கை கவிஞர் காசி. ஆனந்தன், சமதா கட்சி தேசிய பொதுச் செயலாளர் என்.ஏ.கோன் உடன் இருந்தனர். அனைவருக்கும் நெடுமாறன் இனிப்பு வழங்கினார்.
மத்திய, மாநில அரசுகளின் உளவு அமைப்புகள் தீவிர விசாரணை
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்ததை தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் மீண்டும் திரட்டி வருகின்றனர். இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டதை, இலங்கை இராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. அவரது மரணத்தில் சந்தேகமில்லையென தெரிவித்திருந்தது.
இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தையடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அப்பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நெடுமாறன் ஏமாற்றப்பட்டாரா?
நெடுமாறன் நேற்று குறிப்பிட்ட தகவலில், பிரபாகரன், மனைவி, மகள் உயிருடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம்- கடந்த மாதம் சுவிற்சர்லாந்தில் நடந்த மோசடி சம்பவம். பிரபாகரன், மனைவி, மகள் உயிருடன் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிதியளியுங்கள் என சுவிற்சர்லாந்து வர்த்தகர்களிடம் ஒரு குழு நிதி திரட்டியது.
இந்த மோசடிக்குழு, பெண்ணொருவருக்கு முக்காடிட்டி, இவர்தான் பிரபாகரனின் மனைவி மனிவதனி என குறிப்பிட்டு, கூட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கூட்டத்திலும் முக்காட்டை விலக்கவில்லை.
அந்த கூட்டத்திலிருந்த ஒருவர் பின்னர் பிரித்தானியா சென்றார். அங்குள்ள துவாரகாவை சந்தித்த பின்னரே நிதியளிப்பேன் என கூறியதையடுத்து, யுவதியொருவருக்கு முக்காடிட்டி அழைத்து வந்திருந்தனர். அவருடன் வர்த்தகர் பேசிய போது, அவர் மோசடி பேர்வழி, பொய் கூறுகிறார் என்பதை புரிந்து, சுவிசிலுள்ள ஏனைய வர்த்தகர்களிற்கு தகவலளித்து, நிதியளிப்பதை நிறுத்தினார்.
இந்த மோசடிக்கும்பல், தமது குட்டு வெளிப்படுவதை தடுக்க நெடுமாறனை பயன்படுத்தியிருக்கக்கூடும் என கருதப்படுகிறது. யாராவது ஒரு பெண்ணிற்கு முக்காடு அணிவித்து. அவர்தான் பிரபாகரனின் மனைவியென குறிப்பிட்டு. இணைய வழியில் நெடுமாறனுடன் உரையாட வைத்து நம்ப வைத்திருக்கலாமென கருதப்படுகிறது.