வடக்கு மாகாணத்தின் ஆரம்ப சுகாதார வைத்தியசாலைகளின் பராமரிப்பிற்கு உலக வங்கி ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டை வட மாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே தான் நினைத்தபடி நிதிகளை கையாளுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
உலக வங்கியின் 5 ஆண்டுத் திட்டத்தில் 2023 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்திற்கு ஆயிரத்து 444 மில்லியன் அனுமதிக்கப்பட்டு அவை வடக்கின் 5 மாவட்டத்தின் தேவை அடிப்படையில் உலகவங்கியின் இணக்கம், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள் நிதி, திட்டமிடல் ஆகியவற்றின் ஒப்புதலுடன் பங்கீடு செய்யப்பட்டிருந்தன.
இருந்தபோதும் தற்போது 2023 இல் வடக்கு மாகாண சுகாதார துறைக்காக இவ்வாறு ஒதுக்கப்பட்ட 1,444 மில்லியன் தொகையும் 5 மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடாமல் வவுனியா வைத்தியசாலையில் உள்ள திடீர் விபத்து பிரிவின் கட்டுமானத்துக்காக வடமாகாண சுகாதார பணிப்பாளர் தான்தோன்றித்தனமாக அதிக நிதியை ஒதுக்கியுள்ளார்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 425 மில்லியன் ரூபாவும், வவுனியா 250 மில்லியன் மன்னார் 270 மில்லியன் முல்லைத்தீவு 250 மில்லியன் கிளிநொச்சி 210 மில்லியன் ரூபா என ஒதுக்கப்பட்டது.
மாகாண சுகாதாரத் திணைக்களத்திற்கு 30 மில்லியன் ரூபாவும், மாகாண சுகாதார அமைச்சிற்கு 9 மில்லியன் ரூபா என்ற அடிப்படையிலேயே ஆயிரத்து 444 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒதுக்கீடே தற்போது எவருக்கும் தெரியாது மாற்றி அமைக்கப்பட்டது.
மாகாணத்தின் நிதி அதிகாரம் ஜனாதிபதியினால் வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்ட நிலையில் ஆளுநருக்கு தெரியாமல் நிதி பங்கிடப்பட்டமை ஆளுநருக்கு முறையிடப்பட்டது.
மேலும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளரை வட மாகாண ஆளுநருக்கு அறிவிக்காமல் மாகாண சுகாதார பணிமனைக்கு இடமாற்றியமை.
பதில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமித்த வைத்தியர் மருத்துவ நிர்வாக தரத்தை பூர்த்தி செய்யாத ஒருவரை பதில் கடமையாக நியமித்தமை தொடர்பிலும் அக்கால பகுதியில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தெல்லிப்பளை யில் இயங்கிவரும் (குடில்) காப்பகத்தையும் ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருநெல்வேலி பகுதியில் இயங்கும் மாதவம் இல்லத்தையும் மூடுவதற்கான முயற்சிகளை வட மாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே மேற்கொண்ட மை வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த விடயம் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு பல விடயங்களை தான் நினைத்தபடி வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மேற்கொண்டு வரும் நிலையில் வட மாகாண ஆளுநர் மௌனம் காப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




