கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி முனையில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டி வைத்து விட்டு, 76 இலட்சம் ரூபா பணத்துடன் ATM இயந்திரத்தை திருடிச் சென்ற ஆயுதமேந்திய கொள்ளைக் குழுவை கைது செய்ய 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
ATM இயந்திரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட KDH ரக வாகனம் பேராதனை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதியை பொலிசார் கைது செய்தனர்.
நேற்று (25) அதிகாலை 1.00 மணியளவில் இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது.
இந்த வாகனம் ஹெம்மாதகம அரநாயக்க பிரதேசத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன் அதன் உரிமையாளரும் நேற்று பிற்பகல் கம்பளை பொலிஸாருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
உரிமையாளரின் தகவலின்படி, இந்த வாகனத்தை ஒன்லைன் மூலம் வாடகைக்கு அமர்த்திய சிலர் பேராதனை கலஹா சந்திக்கு கொண்டு வந்துள்ளனர்.
சாரதியின் வாக்குமூலத்தின்படி, 24ம் திகதி இரவு வாகன சாரதியுடன் கலஹா தெல்தோட்டை பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அந்த பகுதியை சேர்ந்த மேலும் இருவரை ஏற்றிக்கொண்டு வந்தனர். பின்னர், சாரதியின் கை,கண்களை கட்டி, வெறிச்சோடிய இடமமொன்றில் சாரதியை இறக்கி, தமது குழுவிலிருந்த ஒருவரையும் துணைக்கு நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் கம்பளைக்கு வந்த பின்னர் இந்த வங்கிக் கொள்ளையைச் செய்துவிட்டு மீண்டும் தெல்தோட்டை பிரதேசத்திற்குச் சென்று சாரதியை வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் கலஹா மன்சந்தி என்ற இடத்தில் வாகனத்தையும், சாரதியையும் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணை கட்டிவிட்டு சென்றதால், அவர்கள் பயணித்த வாகன விபரம் தெரியவில்லையென்றார்.
கம்பளை தடயவியல் பிரிவு, கண்டி கைரேகைப் பிரிவு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
வாகன சாரதியின் வாக்குமூலம் முரண்பட்டதால், அவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பகுதிகளை அடையாளம் காண பொலிசார் சிசிடிவி கமராக்களை சோதனை செய்யத் தொடங்கினர். இதேவேளை, வாகன சாரதியின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதால், அவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.




