புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதயம் மற்றும் சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே. ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.
இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தொற்றால் அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு சிறுநீரகம் மற்றும் இருதய செயல்பாடுகள் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீலேவின் மகள் கெல்லி நாஸிமென்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பீலேவுடன் இருந்ததாக தெரிவித்திருந்தார்.
பீலேவின் மகன் தந்தையின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தந்தையே நீங்கள் தான் எனது வலிமை என்று பதிவிட்டிருந்தார்.




