ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
51 வயதான இவர் நேற்று (15) மாலை பொரளை மயானத்தில் தனது காருக்குள் ஜிப் கட்டுகளால் (zip ties) பிணைக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் ஷாஃப்டர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.
தனக்கு பாரிய தொகை பாக்கி வைத்துள்ள நபரை சந்திப்பதாக தனது மனைவிக்கு தெரிவித்துவிட்டு கொழும்பு 07 இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நபருக்கும் தினேஷ் ஷாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இந்த கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படும் நபர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் முன்னதாக பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
நேற்று வீட்டிலிருந்து புறப்பட்ட ஷாஃப்டரின் தொலைபேசிக்கு மனைவி தொடர்பு கொள்ள முடியாதமல் போனதையடுத்து, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம், அவர் பொரளை மயானத்தில் இருப்பதை கண்டறிந்தார். உடனடியாக ஜனசக்தி நிறுவன நிர்வாக அதிகாரியொருவருக்கு தகவல் வழங்கினார்.
அந்த நிர்வாக அதிகாரி பொரளை மயானத்திற்கு சென்றார். அங்கு ஷாஃப்டர் கை மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
மயான ஊழியர் ஒருவரின் உதவியுடன் ஷாஃப்டரின் கட்டுக்களை அவிழ்த்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், அங்கு அவர் உயிரிழந்தார்.
கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது



