யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவை மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தத்தை தொடர்ந்து, யாழ்- சென்னை விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. 3 வருடங்களின் பின் சென்னையில் இருந்து முதல் விமானம் இன்று காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
முதல் விமானம் காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.
அலையன்ஸ் ஏர் விமானம் காலை 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட திட்டமிடப்பட்டது. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி விமானம் ஏறக்குறைய ரூ.41,800 ஆகும்.
பலாலி விமான நிலையம் 2019 ஒக்டோபர் மாதம் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டது.
ஏர் இந்தியாவின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான இந்தியாவின் அலையன்ஸ், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாராந்திர மூன்று விமானங்களை இயக்கியது.
எதிர்காலத்தில் பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் ஓடுபாதை மறுவடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





