கொள்ளுப்பிட்டியில் நேற்று (10) வாகன விபத்தை தொடர்ந்து பெண் ஒருவரை தாக்கிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு விடுதியிலிருந்து திரும்பிய சொகுசு கார் ஒன்றுஈ அதே திசையில் சென்ற முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சொகுசு வாகனத்தை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். வாகனத்தில் மேலும் 3 பெண்களும், ஆணொருவரும் இருந்தனர். வாகனத்தில் இருந்த பெண் ஒருவர், அங்கு குவிந்த மக்களிடம் சிக்கிக் கொண்டார்.
அவரை இரண்டு பெண்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவின.
தாக்குதலுக்கு உள்ளான பெண், கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததையடுத்து, இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 மற்றும் 64 வயதுடைய பெண்கள் தனியார் நிறுவனமொன்றின் துப்புரவு பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் நாளை (12) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள வாகன சாரதியை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




