பல பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தகங்களுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது இரட்டைப் பயணங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படவுள்ளது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும்.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.