இலங்கையிடம் தெளிவான வேலைத்திட்டம் உள்ளது. எதிர்வரும் 5 மாதங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டு வர முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க CNN சனலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதுவரை மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் உடன்படிக்கையை மிக விரைவில் எட்ட முடியும் என்றும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை புதிய அரசாங்கம் எவ்வாறு அணுகுகிறது என்பதன் மூலம் நேரம் தீர்மானிக்கப்படும் என்றும் வீரசிங்க கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடலின் போது இலங்கையின் திட்டம் தொழில்நுட்ப குழுவிடம் முன்வைக்கப்பட்டதாக வீரசிங்க குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான முதல் படியாக பணியாளர் உடன்படிக்கையை எட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு இலங்கை முன்வைத்துள்ள திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தினால் ஒரு மாதத்தை உள்ளடக்கிய ஊழியர் உடன்படிக்கையை எட்ட முடியும் என வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
நிலையான அரசாங்கம் நியமிக்கப்படாவிடின் அதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு புதிய அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பொறுத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாத காலத்துக்குள் ஊழியர் உடன்படிக்கையை எட்ட முடியும் என்றும், ஆனால் அதுவே முதல் படி என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடனை மறுசீரமைப்பதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய கடன் வழங்குநர்களுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும் எனவும், அதற்கான நடைமுறைகளை நிறைவு செய்வதற்கு பல மாதங்கள் ஆகும் எனவும் வீரசிங்க குறிப்பிட்டார்.
இந்த இரண்டு படிகளையும் முடித்த பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியும் என்று அவர் கூறினார். இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளப்படும் என வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
அடுத்த சில வாரங்களுக்கு பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி பணம் கொடுத்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான குறுகிய கால நிதி வசதிகளை நட்பு நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பொறுப்பு புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என வீரசிங்க தெரிவித்தார். .
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு புதிய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை எதிர்பார்த்து பொறுமை காக்குமாறு வீரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.




