மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்கு எதிரே அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவங்களில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், இதுவரை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து நாடு பூராகவும் வெடித்த வன்முறைகளால் ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளதுடன் ஏராளமான பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் குறிப்பிட்டார்.
எனவே ஏறக்குறைய ஒரு வாரம் கடந்தும் இன்னும் அதிகமானோர் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது என்றார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் நேரடியாக செயற்பட்ட நபர்களின் பெயர்களுடன் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் பணியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களின் நம்பிக்கையை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.
எனவே, கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி, அதற்குக் காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




