அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தொடருமாறும் கொழும்பு மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றார்.
நேற்று பத்தரமுல்லையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவத்தை அவர் மேற்கோள் காட்டினார்.
மிரிஹானவில் இராணுவப் பேருந்திற்கு நபர் ஒருவர் தீ வைத்த போது பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்றுவரை அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. அரச புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சிறிலங்கா பொலிசார் இருந்த போதிலும் பேருந்திற்கு தீ வைத்த நபரை இதுவரை அடையாளம் காண முடியாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, போராட்டங்கள் தொடர வேண்டும் என்று கூறும் தரப்பினர், ஸ்திரமின்மை காரணமாக ஏற்படும் செயல்பாட்டில் உயிர் இழந்தால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஏழைகள் அல்ல என்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கூறுகையில், தற்போதைய பிரச்சினைகள் குறித்து ஒரு வருடத்திற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எச்சரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிய போதிலும்; எதிர்க்கட்சிகள் பொய்களை உருவாக்குவதாக அரசாங்கம் கூறியதை சுட்டிக்காட்டினார்.
போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது வீடுகளில் இருக்க முடியாது என்றார்.
கோட்டாபய ராஜபக்சவை மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் வைத்து கொலை செய்யஒரு தரப்பினர் முயற்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா” என்ற முழக்கத்தின் கீழ், எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சித்த போதிலும் அவர்கள் வெற்றிபெறவில்லை என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் ஜே.வி.பி போராட்டங்களை ஏற்பாடு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
வீதிகளில் செல்லும் வாகனங்கள், வாகனங்களின் பின்பகுதியில் ‘கோதா கோ ஹோம்’ என்ற வாசகப் பலகைகளை வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
பொதுமக்கள் அச்சமின்றி ஜனாதிபதிக்கு எதிராக களமிறங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தீர்மானம் பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறாமல் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




