முக்கியச் செய்திகள்

முழுமையான அதிகாரமில்லாவிட்டால் நாம் தனிவழி செல்கிறோம்; கோட்டாவின் முன் மேசையில் அறைந்த சம்பந்தன்: நிலைமையை சமாளித்த கோட்டா- ஜனாதிபதி, கூட்டமைப்பு சந்திப்பில் நடந்தது என்ன?

’13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் எமது வழியில் – தனிவழியில் செல்வோம்” என மேசையில் அடித்து கூறினார் இரா.சம்பந்தன்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்பு விவகாரங்களில் உடனடி நடவடிக்கையெடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றது.

ரெலோ இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சமல் ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அரச தரப்பில் பேச்சில் கலந்து கொண்டனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழர்களின் இனப்பிரச்சனை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு, அரசுகள் ஏமாற்றி வரும் வரலாற்றை தெரிவித்தார்.

இரு தரப்பு கருத்து பகிர்வின் பின்னர், அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை வெளியான பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை உத்தேசிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதன் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரத்தை கூட்டமைப்பு தூதுக்குழு சுட்டிக்காட்டியது. கூட்டமைப்பினரிடம் நேற்று அரசியல் கைதிகள் விபரம் உறவினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த விபத்தின் அடிப்படையில் 48 அரசியல் கைதிகள் 10 வருடங்களிற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சாட்சியம் உள்ளவர்கள் விடயத்தில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென கூட்டமைப்பு குறிப்பிட்டது.

வழக்கு தொடரப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை ஆராய்ந்து, சாதகமான முடிவொன்றை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், வழக்கு தொடரப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விடயத்தை நீதியமைச்சர் அலி சப்ரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூடி ஆராய்வதென்றும், ஒவ்வொருவரின் வழக்கையும் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் விலாவாரியாக எடுத்துரைத்தனர். இராணுவம் ஒரு பக்கமாகவும், தொல்லியல் திணைக்களம் ஒரு பக்கமாகவும், வனவள திணைக்களம் ஒரு பக்கமாகவும் காணி அபகரிப்பு செய்கிறார்கள், வயல் நிலங்கள், வணக்க தலங்கள், குடியிருப்புக்கள் என பல இடங்களை மக்கள் நுழைய தடைவிதிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியும், பிரதமரும், இப்படியான விடயத்தை தாம் அறிந்திருக்கவில்லையென்ற பாவனையில் முக பாவனையை காண்பித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பு எம்.பியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

‘இராணுவத்தினர் காணி சுவீகரிக்கிறார்களா? அவர்களிற்கு எதற்கு காணி?’ என ஜனாதிபதி ஆச்சரியமாக கேள்வியெழுப்பினார்.

வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான காணி சுவீகரிப்பையும் நிறுத்த உத்தரவிடுமாறும், இது விடயமாக கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு கோரியது.

உடனடியாக, அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கோள்ள தடையேற்படுத்தக் கூடாது என கூட்டமைப்பு தெரிவித்தது. புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக வடக்கு கிழக்கில் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கலந்துரையாடலின் ஒரு கட்டத்தில், 13வது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென அமைச்சர்கள் ஜீ.எஸ்.பீரிஸ், அலி சப்ரி கருத்து தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த இரா.சம்பந்தன், மேசையில் ஓங்கி அறைந்து, ”13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல்ப்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் எமது வழியில் – தனிவழியில் செல்வோம்” என கோபமாக கூறினார்.

உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கினார். ‘அதை அமுல்ப்படுத்த முடியாதென நாம் சொல்லவில்லை. அதிலுள்ள சில சவால்களையே குறிப்பிட்டோம். நாம் முழுமையான அதிகார பகிர்விற்கு அனைத்து முயற்சிகளும் செய்வோம்’ என்றார்.

‘எனது அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த கலந்துரையாடலிற்கு வந்தது மகிழ்ச்சி. உங்களிற்கு உள்ள அரசியல் பாதையில் நீங்கள் பயணியுங்கள். ஆனால், நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதில் இணைந்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்’ என ஜனாதிபதி தெரிவித்தார்.

‘ஜனாதிபதியின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். இணைந்து பணியாற்றவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், அதற்கு முன்னர் அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த நாட்டில் சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக, சகல உரித்துக்களுடனும் வாழும் நிரந்தர தீர்வு எட்டப்பட்டால் இணைந்து பணியாற்ற தயராக இருக்கிறோம்’ என இரா.சம்பந்தன் பதிலளித்தார்.

அதற்கான முழு முயற்சியும் தான்எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரு தரப்பும் மீண்டும் சந்தித்து பேசுவதென்ற இணக்கப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

Pagetamil

‘வீடுகளில் நாய்க்குட்டி, பூனைக்குட்டிகள் நிறைந்துள்ளன… குழந்தைகள் இல்லை’: குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு இத்தாலிய இளையவர்களிடம் போப் மன்றாட்டம்!

Pagetamil

ரி20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு: வியாஸ்காந்த் மேலதிக வீரராக இணைப்பு!

Pagetamil

ஜனாதிபதி தேர்தல் காலத்தை அறிவித்தது தேர்தல் ஆணைக்குழு!

Pagetamil

தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் தமிழ் பொதுவேட்பாளரின் அபாயங்களும், சாத்தியமின்மைகளும்!

Pagetamil

Leave a Comment