எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.2,000 நஷ்டமடைந்து வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் நட்டத்தில் எரிவாயு விநியோகம் செய்தால் மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் எனவும், நாட்டில் எஞ்சியுள்ள ஒரேயொரு எரிவாயு நிறுவனத்தை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
தற்போது எரிவாயுவை இறக்கும் கப்பலால் லிட்ரோ நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எரிவாயு வழங்குவதில் ஏற்பட்ட நஷ்டத்தினால் 2021 ஆம் ஆண்டு மாத்திரம் 1100 மில்லியன் ரூபாவை லிட்ரோ இழந்துள்ளதாகவும் இவ்வருடம் இதுவரை 1 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ தலைமையகத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



