முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் இன்று (16) அவரது வீடு சோதனையிடப்பட்டது.
இதன்போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள், 7.2 ரகத் தோட்டாக்கள் 31, 0.2 ரகத் தோட்டாக்கள் 103 மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை விசாரணையாளர்கள் கைப்பற்றினர்.
இதனடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் முன்னெடுத்த மேலதிக சோதனைகளின் போது, அங்கு பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு துப்பாக்கி சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், மற்றைய 3 துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவையில் 2 சொட்கன் (Shotgun) ரக துப்பாக்கிகளும், 2 9mm ரக துப்பாக்கிகளும் அடங்குகின்றன.
சந்தன கத்ரியாராச்சி வசம் இவ்வளவு பெரிய அளவிலான ஆயுதங்கள் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



