கல்வி கற்பதற்காக உக்ரைனுக்கு சென்றிருந்த கோவையைச் சேர்ந்த இளைஞர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது. 13-வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் போரைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளின் வழியாக வெளியேறி வருகின்றனர். அங்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களை மத்திய அரசுக் குழுவினர் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகின்றனர்.
இச்சூழுலில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம் என அந்நாடு அறிவித்தது.
இதையடுத்து ஏராளமானோர் அந்நாட்டின் இராணுவத்துக்கு உட்பட்ட துணை இராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் , கோவை துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற இளைஞரும் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஜான்சி லட்சுமி. தம்பதிகளுக்கு சாய் நிகேஷ், சாய் ரோஹித் என்ற 2 மகன்கள் உள்ளனர். சாய் நிகேஷுக்கு இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்து இந்திய இராணுவத்தில் இனைய முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், 2 முறையும் உயரம் குறைவு காரணமாக தோல்வியுற்றார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என விரும்பி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டால், அங்கும் சாய் நிகேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இதனையடுத்து, ஏரோ நாட்டிகள் எஞ்சினியரிங் படிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த 2019 ஆம் வருடம் உக்ரைனில் உள்ள கார்கிவ் நஷனல் ஏரோபோர்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். தற்போது அவர் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஜூலை மாத விடுமுறையின் போது இந்தியா வந்து சென்ற சாய் நிகேஷ், உக்ரைனுக்கு சென்றாலும் தினமும் பெற்றோரிடம் தவறாமல் பேசி வந்துள்ளார். கடந்த மாதத்தில் பெற்றோரிடம் தொடர்பு கொண்ட சாய் நிகேஷ், தனக்கு கேம் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதனை பெற்றோர்கள் பாராட்டினாலும், படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். நடப்பு வருடம் ஜூலை மாதத்துடன் சாய் நிகேஷுக்கு படிப்பு நிறைவடையவிருந்த நிலையில், உக்ரைன் – ரஷியா போர் ஏற்பட்டதால் பெற்றோர் மகனை இந்தியா வந்துவிட வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சாய் நிகேஷ், நான் வீடியோ கேம் நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை. இராணுவ ஆசை இருந்ததால், ஜோர்ஜியா நஷனல் லெஜியன் துணை இராணுவ பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் பணியாற்றி வருகிறேன். உக்ரைன் படைகளுக்கு ஆதராக ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதையறிந்த மத்திய , மாநில உளவுத்துறையினர் கோவையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் இது தொடர்பாக விசாரித்து உள்ளனர்.
உக்ரைனில் உள்ள அவர் தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது தொடர்பாகவும் உளவுத்துறையினர் விசாரித்து உள்ளனர்.