பொரளையிலுள்ள தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொய்யான கதையை புனைந்துள்ளதாக பேராயர் மல்கம் ரஞ்சித் நேற்று (13) பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஊடகங்களுக்கு வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிற்பகல் 3 மணி முதல் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அருட்தந்தையர்கள் காலையில் இருந்தே சிசிடிவி காட்சிகளை அவதானித்து, 9.52 மணியளவில் ஒருவர் வந்து எதையோ விட்டு சென்ற சம்பவத்தை அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வெளிப்படுத்திய விசாரணை தகவல்களை நிராகரித்த பேராயர், உண்மையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக உருவாக்கிய கதைகளை பொலிசார் முன்வைப்பதாக குற்றம் சாட்டினார்.
சம்பவத்தன்று காலையில் சிசிடிவியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு நபரை விசாரிக்காமல், தேவாலயத்தில் பணிபுரியும் ஒருவரைக் கைது செய்ததற்காக பொலிசாரை பேராயர் விமர்சித்தார்.
இது ஒரு சதி என்றும், அரசியல்வாதிகள் போல் நேர்மையற்ற முறையில் போலீசார் நடந்து கொள்ளக் கூடாது என்றும், அப்படியானால் சீருடைகளை கழற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.




