நெல்லியடியில் திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று, யுவதியை கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பாவனையுடைய 20 வயதான இரண்டு இளைஞர்களே கைதாகினர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மேற்கு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான 18 வயதான யுவதியொருவரே, நேற்று முன்தினம்(11) இந்த முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார். தொலைபேசியில் அறிமுகமான முகமறியாத காதலன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக முறைப்பாடு செய்திருந்தார்.
கைத்தொலைபேசியில் வந்த தவறான அழைப்பே இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது. யுவதி, தாயாரின் பராமரிப்பிலேயே இருக்கிறார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மதியம் 2 மணிக்கு வீதியோரம் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
18 வயதான அந்த யுவதிக்கு தொலைபேசியில் தவறிய அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் முகம் தெரியாமலே தொலைபேசியில் காதலித்து வந்தனர்.
தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக காதலன் கூறியதையடுத்து, நேற்று முன்தினம் முதன்முறையாக இருவரும் சந்தித்து கொண்டனர். ஜஸ்கிரீம் கடையொன்றிற்கு தன்னை அழைத்துச் சென்று, ஐஸ்கிரீம் வாங்கித் தந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர், தனது தாயாருடன் பேசுவதற்கு அழைத்துச் செல்வதாக காதலன் கூறியுள்ளார்.
காலை 10 மணியளவில் காதலன் தன்னை அழைத்துக் கொண்டு, திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதியொன்றிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் உறவு கொண்ட பின்னர், நீர் அருந்தி விட்டு வருவதாக கூறி காதலன் அங்கிருந்து சென்றதாக கூறியுள்ளார்.
பின்னர், காதலனின் நண்பர்களென தெரிவித்து அங்கு வந்த 3 பேர், தனது கால்களையும் கைகளையும் அழுத்திப் பிடித்து, வாயை பொத்தி, பலாத்காரத்திற்குள்ளாக்கியதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிறிது நேர இடைவெளிக்குள் 4 பேர் தன்னை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் காதலன் அங்கு வந்ததாகவும், தனது கைத்தொலைபேசி, நகைகள், 40,000 ரூபா பணத்தை பறித்து விட்டு, வீட்டிற்கு அருகில் வீதியோரத்தில் இறக்கி விட்டு சென்று விட்டார்கள் என முறைப்பாடு செய்துள்ளார்.
யுவதி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் திக்கம் பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியென்பதால், இந்த முறைப்பாடு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் துன்னாலை பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்களில் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். 20 வயதான அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசியில் யுவதிக்கு வலைவீசிய கலாப காதலனும், இன்னொருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட யுவதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.