பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் அப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர்.
கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது.
கடைசியாக 2013இல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மொடல் போன்கள் தனது புகழை தக்கவைக்க முயன்றது. செல்போன் சந்தைகளில் முக்கியமானதாக இருந்த இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த ஆப்டிமஸ் நிறுவனத்துடனும், உலக அளவில் டிசிஎல் கம்யூனிகேஷன் என்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தது.
ஆனால், அந்த முயற்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் செல்போன் உற்பத்தித் துறையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தனது பிராண்ட் உரிமத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு கார்ப்பரேட் பாதுகாப்பு சேவை உரிமைகளை மட்டும் பராமரிக்கத் தொடங்கியது பிளாக்பெர்ரி. இதனிடையே, பிளாக்பெர்ரி. os போன்கள் நேற்று முதல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த சேவைகளை நிறுத்தபோவதாக ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில பயனர்களின் கோரிக்கையை ஏற்று இத்தனை நாட்கள் சேவையை நீடித்த பிளாக்பெர்ரி இப்போது நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.