இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ஊழியர்களின் 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இ.போ.ச நிர்வாகமும், பொலிசாரும் வழங்கிய வாக்குறுதியையடுத்து காலை 7 மணி முதல் சேவைகள் ஆரம்பிக்கின்றன.
முன்னைய செய்தி: பேருந்துகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்: பருத்தித்துறை இ.போ.ச பணிப்புறக்கணிப்பு!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மீது நேற்று இரவும், இன்று அதிகாலையும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, பருத்தித்துறை சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் குதித்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சேவையில் ஈடுபட மாட்டோம் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
எனினும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பொலிசாரும், இ.போ.ச நிர்வாகமும் உத்தரவாதமளித்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பருத்தித்துறை சாலையில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து, நேற்று இரவு 8.30 மணிளவில் நெல்லியடி சந்தியில் தாக்கப்பட்டது. பேருந்து சேதமாக்கப்பட்டதுடன், சாரதி, நடத்துனரும் தாக்கப்பட்டனர்.
முச்ச்கரவண்டி சாரதிகளே தம்மை தாக்கியதாக சாரதியும், நடத்துனரும் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை புல்மோட்டை செல்லும், பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்தும் தாக்கப்பட்டது.
பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு வல்வெட்டித்துறை, மண்டான் ஊடாக பயணித்து நெல்லியடி நகரிற்கு வந்து, கொடிகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி செல்வது இந்த பேருந்தின் பயணப்பாதை.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து வல்லை வெளியில் இனம்தெரியாதவர்களால் கல்வீசி தாக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைந்துள்ளன.
பேருந்து தற்போது நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், தாக்குதலாளிகளை கைது செய்ய கோரியும், இபோசவிற்கு சொந்தமான நெல்லியடி பேருந்து நிலையத்தில் தரித்து நிற்கும் முச்சக்கர வண்டிகளை அகற்றவும் வலியுறுத்தி பருத்தித்துறை சாலை தொழிலாளர்கள் இன்று அதிகாலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை முதல் பருத்தித்துறை சாலை பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை.
ஊழியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதாகவும், தாக்குதலாளிகளை உடனடியாக கைது செய்வதாகவும் பொலிசார், பருத்தித்துறை சாலைக்கு சென்று உத்தரவாதமளித்தனர். மீண்டும் சேவையை ஆரம்பிக்க இ.போ.ச நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், தாக்குதலாளிகளை கைது செய்யும் வரை மீண்டும் சேவையில் ஈடுபட மாட்டோம் என இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.