சீசெல்ஸில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையரின், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
சீசெல்ஸில் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட தீவான லா டிகுவில் வசிக்கும் ஹரீந்திர பொன்னவிலகே டொன் (47) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
சீசெல்ஸின் வர்த்தகர் ஒருவரிடம் ஹரீந்திர பணியாற்றி வந்துள்ளார். வர்த்தகருக்கு சொந்தமாக வீடொன்றில் டிசம்பர் 10 வெள்ளிக்கிழமை காலை 8.50 மணியளவில் இலங்கையரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
நான்கு நாட்களாகியும் வேலைக்குச் செல்லாத நிலையில் இலங்கையரைத் தேடிச் சென்றதாக கட்டுமான நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு சென்றபோது யாரையும் காணவில்லை என்றும், படுக்கையறை ஜன்னல் வழியாக சென்று பார்த்தபோது, தரையில் அந்த ஊழியர் வீழ்ந்து கிடந்ததாகவும், தாம் கூப்பிட்ட போதும் பதில் சொல்லாததையடுத்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
வீட்டில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உடலில் எந்த அறிகுறியும் தெரியவில்லை.
மூன்று நாட்களுக்குப் பிறகு, காவல்துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில், இலங்கையர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு விசாரணை மற்றொரு பரிமாணத்தை எடுத்து இப்போது கொலை வழக்காக மாறியுள்ளது.
இக்கொலை வழக்கில் இன்று வரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




