கோயிலை எப்படி நடத்துவதென நல்லூர் ஆலயத்தை மாப்பாண முதலியார் நடத்தியதன் மூலம் தெரிந்து கொள்ளலாமென நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அண்மையில் வெளியிட்ட வீடியோவில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோயிலை நடத்தினால்தான் தெரியும், அது எவ்வளவு பெரிய வேலையென. முஸ்லிம் தீவிரவாதிகள் வருவதற்கு முன்னர் ஆதிசைவ வேளாளர்கள் ஆலயத்தின் மூலமாக அரசாட்சியும், அருளாட்சியும் நடத்தினார்கள். முஸ்லிம் தீவிரவாதிகள் வந்து அரசாட்சியை பிடுங்கினார்கள். அருளாட்சி மிஞ்சியது.
பின்னர் கிறிஸ்தவ தீவிரவாதிகள்- பிரிட்டிசார் வந்து அருளாட்சியையும் பிடுங்கி, மணியக்காரர்களாக மாற்றினார்கள். அதன் பின் எச்ஆர்என்சி வந்து மணியத்தையும் பிடுங்கி, கோயில் குடிகளான எங்களை வெளியேற்றி அனாதைகளாக்கினார்கள்.
கோயில் எங்கள் வாழ்வாதாரம். எங்கள் சிந்தனையே ஆலயம் சார்ந்தது. நாங்கள் கோயில் குடிகள். எல்லாவற்றையும் பிடுங்கிவிட்டு, இந்துக்களிற்கு ஒழுங்காக கோயில் நடத்த தெரியாததால் அரசு எடுத்ததாக கூறினார்கள்.
போய்ப்பாருங்கள் நல்லூர் கோயிலில் மாப்பாண முதலியார் ஒருத்தர் உவ்வளவு அருமையாக அந்த ஆலயத்தை நடத்தியுள்ளார். மாப்பாண முதலியார் மாதிரி தமிழ் நாட்டில் இல்லாமல் இருந்தார்களா? பல ஆலயங்கள் இருந்தன. ஆதி சைவர்களும், சிவாச்சாரியார்களும், நகரத்தாரும் இணைந்து கோயில்களை நடத்தியிருந்தார்கள்.




