விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் 15 இலங்கையர்கள் மீது, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி அரபிக்கடலில், மீன்பிடிப்படகில் ஆயுதங்களும், போதைப்பொருளும் கடத்திச் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஏனைய பலர் கைதாகியிருந்தனர்.
இர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரவிஹன்சி என்ற மீன்பிடிப் படகில், இலங்கையில் உள்ள குடவெல்ல துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்றுள்ளமை தெரிய வந்தது.
அரபிக்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் எடுத்துச் சென்றதாக கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையினால் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஒய்.நந்தன, ஜனக தசப்பிரிய, நமேஷ் சுல்லக்க செனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, ததல்லகே நிஸ்ஸங்க, ஏ.சுரேஷ் ராஜ், எல்.வை.நிஷாந்த சுத்தா, ஏ.ரமேஷ், சற்குணம் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்முதல் செய்து கடல் வழியாக இலங்கைக்கும், அதையொட்டி இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் சிலர் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த சதிக் கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தியதாகவும், இலங்கைக்கு எதிராக போர் தொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.