கேரள மாநிலத்தின், கோட்டயம், புதுப்பள்ளியில் தனது கணவரை கோடாலியால் வெட்டிக் கொன்றுவிட்டு, குழந்தையுடன் தலைமறைவான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாரின் விசாரணையில், கொலைக்கான அதிர்ச்சி காரணத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை இந்த கொலைச்சம்பவம் நடந்தது.
புதுப்பள்ளி பெரும்காவு பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சிஜி என்கிற மத்யூ ஆபிரகாம் (48) வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது மனைவியான ரோசன்னா கொலையை செய்துவிட்டு, குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
சிஜியின் சகோதரரின் மனைவி அந்த வீட்டிற்கு வந்த போது, சிஜி இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
பொலிசார் தலைமறைவாகிய ரோசன்னாவை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஜிக்கும் ரோசன்னாவிற்கும் அண்மை நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.மது அருந்தல், ஒழுக்கக்கேடு, தனது குடும்பத்தை விட சகோதரரின் குடும்பத்தை சிஜி அதிகமாக கவனித்தமையே கொலைக்கான காரணங்கள் என கோட்டயம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமான சண்டையை தொடர்ந்து தொடர்ந்து 3 நாட்கள் வீட்டில் சமைக்கவில்லை. சம்பவ தினத்திலன்று, சிஜி வெளியிலிருந்து பிரியாணி வாங்கி வந்திருந்தார். தனக்கு தராமல், சிஜியும், மகனும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு, மீதியை அருகிலுள்ள சகோதரன் வீட்டிற்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக ரோசன்னா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கோடாரியால் சிஜியின் தலையை கொத்தி கொலை செய்துள்ளார்.
ரோசன்னாவிற்கு மனநல பிரச்சனைகளும் உள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.



