தமிழ் பேசும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (12) கொழும்பில் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
முதலாவது சந்திப்பிற்கு வருவேன் என கடைசி வரை கூறிவிட்டு, காலைவாரிய இரா.சம்பந்தன் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் பேசும் சிறுபான்மையினரின் இனப்பிரச்சனை தீர்வு விடயம் மற்றும் அன்றாட பிரச்சனைகளில் ஒருமித்து செயற்படும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகிறது.
கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள குளோபல் ட்ரவர் ஹொட்டலில் காலை 11 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும்.
இந்த கூட்டத்தை தலைமைதாங்கும்படி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பிட்ட கடிதத்தை நேற்று முன்தினம் (10) பாராளுமன்றத்தில் வைத்து அவர்கள் கையளித்திருந்தனர்.
இப்படியான ஒற்றுமை முயற்சிகள் காலத்தின் தேவையென்பதால், தான் கட்டாயம் கலந்து கொள்வேன் என இரா.சம்பந்தன் அப்போத உறுதியளித்ததாக அறிய முடிகிறது.
இன்றைய சந்திப்பில், தவிர்க்க முடியாத காரணங்களினால் சில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வதில் சிரமம் இருக்குமென தெரிகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனது திருமண வரவேற்பு நேற்று இரவும் நடந்தது. அவர் கொழும்பிற்கு உடனடியாக வர மாட்டார் என தெரிகிறது.
கொழும்பில் தங்கியிருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த த.சித்தார்த்தன், மாவை சேனாதிராசாவின் வீட்டு திருமணத்திற்காக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் உடனடியாக கொழும்பு செல்ல மாட்டார் என தெரிகிறது. அவர் சார்பில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சரேஷ் பிரேமச்சந்திரனும், தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவரது சகோதரர் கலாநிதி சர்வேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொள்வார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன் கொழும்பில்தான் ங்கியுள்ளார். அதேபோலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் கொழும்பிலேயே தங்கியுள்ளனர். இவர்கள் கலந்துகொள்வார்களா இல்லையா என்பது பற்றி இறுதியான தகவல்கள் இல்லை.




