தமிழக முதல்வர்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு!

Date:

தமிழ் பேசும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (12) கொழும்பில் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

முதலாவது சந்திப்பிற்கு வருவேன் என கடைசி வரை கூறிவிட்டு, காலைவாரிய இரா.சம்பந்தன் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள குளோபல் ட்ரவர் ஹொட்டலில் காலை 11 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கும்.

இந்த கூட்டத்தை தலைமைதாங்கும்படி, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பிட்ட கடிதத்தை நேற்று முன்தினம் (10) பாராளுமன்றத்தில் வைத்து அவர்கள் கையளித்திருந்தனர்.

முதலாவது கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போதும், இரா.சம்பந்தன் இப்படியான வாக்குறுதி வழங்கியிருந்தார். பின்னர் திடீரென பல்டியடித்து விட்டார். அந்த முடிவு மாற்றத்தில் எம்.ஏ.சுமந்திரனின் பங்குமிருந்ததாக அப்போது சொல்லப்பட்டது.

இந்த கலந்துரையாடலிற்கான ஏற்பாடுகளை ரெலோ செய்து வருகிறது. எனினும், ரெலோவிற்கு பின்னாலும் யாரும் இருக்கக்கூடும். அனேகமாக, ஒரு ‘இந்திய தொடர்பின் மூலமே’ ரெலோ இந்த நகர்வை தீவிரமாக முன்னெடுப்பதாக தெரிகிறது.

இந்த ஏற்பாடுகளின் பின்னணி யார் என்று ஆராய்வதை விட, ஒரு முக்கியமான கூட்டு நகர்வொன்றை நோக்கி, இந்த கலந்துரையாடல் நகர்வதை சுட்டிக்காட்டுவதே முக்கியமானதாகபடுகிறது.

இந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து, தமிழ் பேசும் தரப்புக்கள் கூட்டாக இந்தியா பயணம் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதை தமிழ்பக்கம் அறிந்தது.

இந்த கூட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய ரெலோவின் முக்கிய ஆதாரமொன்றின் மூலம் தமிழ்பக்கம் இதனை அறிந்தது. அனேகமாக, இன்றைய கலந்துரையாடலில் அதற்கான முன்னோடி பேச்சுக்கள் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரே கட்டமாக அல்லது இரண்டு கட்டமாக இந்தியா பயணித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென தெரிகிறது.

இந்த முயற்சியில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒத்துழைப்பு வழங்காவிடில், அவர்களை தவிர்ந்த ஏனைய தரப்புக்களுடன் ஒன்றிணைந்து இந்திய பயணம் மேற்கொள்ள ரெலோ திட்டமிடுகிறது.

தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரிக்கும் ஆவணத்தை ஸ்டாலினிடமும் கையளித்து, தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர, உடனடி தீர்வை காண தமிழக அரசின் தார்மீக ஆதரவுடன், மத்திய அரசின் நேரடி தலையீட்டிற்கான அழுத்தத்தையும் தமிழ் தரப்புக்கள் கோரவுள்ளன. அத்துடன், வடக்கு கிழக்கு தொழில்துறையில் தமிழக முதலீடுகளையும் கோருவார்கள்.

இந்த முயற்சி குறித்த தகவல்கள் ஏற்கனவே ஸ்டாலினிற்கு வழங்கப்பட்டு, அவரும் சந்திப்பிற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

இப்படியொரு முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ் கட்சிகள் தமிழக முதல்வரை சந்திக்கும் இன்னொரு முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டு, பயணத்திற்காக விமான சீட்டு பெறும் நிலையில் உள்ளது. அது பற்றிய தகவல்களை நாளை தருகிறோம்.

 

spot_imgspot_img

More like this
Related

இலங்கை முழுவதும் முறையான பதிவுகளின்றி 300 முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன!

நாட்டில் 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இருப்பது உறுதி...

சிறையிலுள்ள பாடகரை முன்னணியினர் சந்தித்தனர்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர்...

செம்மணியில் 293 மனித என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வரை 283 மனித என்பு கூட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்