திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி லிங்கநகர் பிரதேசத்தில் பிரதான வீதியில் குடிபோதையில் அட்டகாசம் செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (24) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
குடிபோதையில் திருகோணமலை கண்டி வீதி பிரதான வீதியில் பயணித்த வாகனங்களுக்கு கற்களால் எறிந்து சேதப்படுத்தியதுடன் வீதியால் பயணித்த பயணிகளுக்கும் இடையூறு விளைவித்து வீதியால் பயணித்த பெண்கள்மீது முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு குடிபோதையில் அட்டகாசம் செய்த குறித்த நபர் கந்தளாய் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 30வயதானவர் எனவும், சிகிச்சை ஒன்றிற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வந்ததாகவும், இன்றைய தினம் நகரில் பல வர்த்தக நிலையங்களில் அட்டகாசம் செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு குடிபோதையில் அத்துமீறி நடந்துகொண்ட நபரினால் சொகுசு கார் ஒன்று சேதமடைந்துள்ளது. அவரது சேட்டையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
–திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-