கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டி வைத்த 25 வயதுடைய அயல்வீட்டு இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் பூநகரியில் வசித்து வருகின்ற நிலையில் சிறுமி கொடிகாமத்தில் உள்ள பேத்தி வீட்டில் தங்கியிருந்தார்.
சிறுமி நேற்று அயல் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பி வரும் வேளையில் பக்கத்து வீட்டு இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் கயிற்றினால் கட்டி வைத்துள்ளார்.
அதன்பின்னர் சிறுமியின் உறவினருக்கு “சிறுமியின் தந்தை வந்தால்தான் சிறுமியை விடுவிப்பேன்” என கூறினார்.
இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
விரைந்து செயற்பட்ட கொடிகாமப் பொலிஸார் நேற்றைய தினமே சிறுமியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன், இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்த இளைஞனுக்கும் சிறுமியின் தந்தைக்கும் இடையில் நகைப் பிரச்சினை இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.