டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1000 கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொலர் நெருக்கடி மிகவும் பாரதூரமானதாக மாறியுள்ளதாகவும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் அடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவான டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் இயங்குவதால் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, டொலர் பற்றாக்குறையை சமாளிக்க எதிர்வரும் காலங்களில் மாற்று வேலைத்திட்டத்திற்கு செல்ல எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



