இலங்கைக்கான சீன தூதரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பதென எடுத்த முடிவால் இந்தியா கடுமையான அதிருப்தியடைந்துள்ளது. இந்தியா தனது கடுமையான அதிருப்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேரில் தெரிவித்ததை தமிழ்பக்கம் அறிந்தது.
கூட்டமைப்பின் சார்பில் முடிவுகளை எடுக்கவல்ல இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய ஒரு பிரமுகர், தான் இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகத்திற்கு விளக்கமளித்ததாக தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டார்.
எனினும், அந்த விளக்கத்தினால் இந்திய திருப்தியடையவில்லை, தனது அதிருப்தியை நேரில் தெரிவித்தது என்பதை தமிழ்பக்கம் அறிந்தது.
இலங்கை அரசின் மீது இந்திய, அமெரிக்க பிடி இறுகி வரும் நிலையில், அந்த தரப்பை சமரசப்படுத்த, சீனா தொடர்பான சில எதிர்மறையான முடிவுகளை இலங்கை அரசு அண்மையில் எடுத்தது. இதனால் அதிருப்தியடைந்துள்ள சீனா, ஒரு அரசியல் நகர்வாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவுடன் பேச்சு நடத்த விரும்பவதாக, இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகவல் அனுப்பியது. சில நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் தொடர்பு கொண்டு, தமது விருப்பத்தை தெரிவித்து, சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தது.
முதலாவது சந்தர்ப்பத்திலேயே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பிற்கு செல்வதை இந்தியா இரசிக்காது என்பதால், இரா.சம்பந்தன் மாத்திரம் சந்தித்து பேசுவதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
எனினும், இந்த சந்திப்பை இந்தியா விரும்பவில்லை.
தமது அதிருப்தியை, கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் நேரடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்திய தூதரை சந்திப்பதற்கு முன்பாக சீன தூதரை சந்திக்க கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. எனினும், இந்தியாவின் அதிருப்தியையடுத்து, சீன தூதரை சந்திப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பமான நிலைமை தோன்றியுள்ளது.




