நியூஸிலந்தின் ஒக்லாந்து நகரில் 6 வாரத்தில் இல்லாதளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
அதனால் அங்கு முடக்கநிலை நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.
தற்போது, ஒக்லாந்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் உள்ளனர். அங்கு டெல்ட்டா வகை வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஒக்லாந்தில் தொற்று எண்ணிக்கை உயர்வது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அது இந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று நினைக்கவில்லை என நியூஸிலந்து துணைப் பிரதமர் கிரான்ட் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட வீடுகளில் அதிகமானோர் கூடியதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
இந்நிலையில், ஒக்லாந்துவாசிகள், மூன்றாம் கட்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அவசரத் தேவைகளுக்காக மட்டும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்றார்.
ஒக்லாந்தில் 24 மணி நேர இடைவெளியில், புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.



