தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் தெரிவித்து வரும் கருத்துக்கள் கூட்டமைப்பிற்குள் சர்ச்சையை தோற்றுவித்திருந்தன. அத்துடன், கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபைகளை வீழ்த்த எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகள் கூட்டமைப்பிற்குள் பெரும் பிரச்சனையை கிளப்பியிருந்தன.
இதையடுத்து, பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி அண்மையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக, இரா.சம்பந்தன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களின் அறிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கிறார்கள்.
கொரோனா வைரஸின் தாக்கம் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது. இதன் விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை அரசியல் யாப்பினூடாக பெற்றுக்கொள்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக பிரதானமான குறிக்கோளாகும்.
இந்த நாட்டிலே தமது பூர்வீகத்தினை கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி அதிகாரம், அடிப்படை உரிமைகள், மற்றும் வாக்குரிமை என்பவற்றினை உள்ளடக்கும், அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீகம், மற்றும் இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் ஏற்ட்டுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும். இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது. ஏனைய சில விடயங்கள் தொடர்பில், ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஒரு அரசியல் யாப்பினை இந்த நாடு உருவாக்க
முனைவதாக கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையை பேணுவது
அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். மாறாக அவர்களை குழப்பக்கூடாது.
ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டிற்குள், சமத்துவம் நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின்
அடிப்படையில் ஒரு தீர்வினை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு
தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும்
கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.