அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள தனது தூதர்களை, ஆலோசனைக்காக திரும்ப அழைத்துக்கொள்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரிட்டனையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதுபற்றி விவாதிக்கும் நோக்கில், பிரான்ஸ் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா இணைந்து செய்த Aukus என்னும் அந்த உடன்பாட்டின் நோக்கம், தென் சீனக் கடலில் உரிமை கோரிவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதாகும்.
இதன் ஒரு அங்கமாக, அவுஸ்திரேலிய கடற்படையை நவீனமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அணுச்சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை அவுஸ்திரேலியா பெறும்.
இந்த உடன்பாட்டு அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கூட்டணி குறித்து பிரான்ஸூக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்ய, பல வருடங்களாக பிரான்சுடன், அவுஸ்திரேலியா பேச்சு நடத்தி உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்நத படிமுறை கிரமமாக இடம்பெற்று வருகிறது.
இதற்குள், Aukus உடன்பாடு எட்டப்பட, பிரான்ஸை கைவிட்டு, அமெரிக்கா பக்கம் தாவிவிட்டது அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியாவோடு ஏற்கெனவே செய்துகொண்டுள்ள சில பில்லியன் டொலர் உடன்பாட்டை மதிப்பிழக்கச் செய்யும் என்பதால், அந்த நடவடிக்கை பிரான்ஸை சினமூட்டி இருக்கிறது.
வெள்ளிக்கிழமை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-யெவ்ஸ் லெ ட்ரியன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தை “முதுகில் குத்திய சம்பவம்” என்று விவரித்தார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
“இந்த ஒப்பந்தம் கூட்டாளர்களுக்கிடையில் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும், அதன் விளைவுகள் நமது கூட்டணிகள், நமது கூட்டாண்மை மற்றும் ஐரோப்பாவுக்கான இந்தோ-பசிபிக் முக்கியத்துவத்தை நேரடியாகப் பாதிக்கும்” என்று “லு ட்ரியன் கூறினார்.
ஒரு வெள்ளை மாளிகையின் அதிகாரி, பிடென் நிர்வாகம் இந்த நடவடிக்கைக்கு வருத்தப்படுவதாகவும், வரும் நாட்களில் பிரான்ஸூடன் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
வோஷிங்டனில் பேசிய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன், பிரான்சில் “ஏமாற்றத்தை” புரிந்து கொண்டதாகவும், “இருதரப்பு உறவுக்கு நாம் கொடுக்கும் மதிப்பை” புரிந்துகொள்வதற்கு அந்த நாட்டுடன் இணைந்து பணியாற்றுவதாக நம்புவதாகவும் கூறினார்.
கூட்டணி நாடுகளிற்கிடையில் தூதர்களை திரும்ப அழைப்பது மிகவும் அசாதாரணமான சம்பவமாகும். மேலும் அவுஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தனது தூதர்களை பிரான்ஸ் திரும்ப அழைத்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
வோஷிங்டனில் உள்ள பிரெஞ்சு இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகளைக் கொண்டாடும் விழாவை ஏற்கனவே இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.
அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை கொண்டிருக்கும் நாடுகளின் விபரம்