ஆப்கானிஸ்தானில் பெண்களிற்கு எதிராக தலிபான்களின் பழமைவாத கட்டுப்பாடுகளிற்கு எதிராக பெண்கள் போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், பல்கலைகழக மாணவிகள் சிலர் தலிபான்களிற்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களை “தனிமைப்படுத்தும்“ தலிபான்களின் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பெண்கள் பங்கேற்றனர்.
அவர்களில் ஒருசிலர் முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்கும் புர்கா அணிந்திருந்தனர். மற்றும் சிலர் முகத்தை முழுமையாக மூடி, கண்களை மட்டும் காட்டும் கறுப்பு நிஹாப் அணிந்திருந்தனர்.
தலிபான் கொடிகள் வைக்கப்பட்டிருந்த அந்த அரங்கில் பேச்சாளர்கள், அண்மை நாள்களாகத் தலிபானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களைச் சாடினர்.
அவர்கள் தலிபான் அமைத்த புதிய இடைக்கால அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் ஆதரித்தனர்.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாணவர், மாணவியருக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தும் தலிபான்களின் திட்டத்தை இந்தப் பெண்கள் வரவேற்றனர். அத்துடன், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய எமிரேட்டை வலுப்படுத்த அவர்கள் பணியாற்றுவதாக உறுதியளித்தனர்.
முன்னதாக, குண்டூஸ் மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கூடி, ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டை ஆதரித்து ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.