மட்டக்களப்பு- கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும், மற்றுமொரு வாலிபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.
இவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டயைடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி தனியாக கடைக்குச் சென்று திரும்பும்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 22 வயதுடைய இளைஞர் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டடிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரைக் கைதுசெய்தவேளை அந்த மாலையை விற்பனை செய்வதற்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகப்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து அந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.