நாடு முழுவதும் டெல்டா பிறழ்வு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இலங்கையில் டெல்டாவின் 4 பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்டா பிறழ்வே, அண்மைய தொற்று எண்ணிக்கை அதிகரிப்பின் பிரதான காரணமாகும்.
இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள சவாலாக மாறியுள்ளது. அதாவது டெல்டா பிறழ்வு உலகம் முழுவதும் வியாபித்து வருகிறது. இதனால்தான் அண்மைய நாட்களில் பல நாடுகள் லொக் டவுன் அறிவிக்க வேண்டியிருந்தது.
இலங்கையில் இரண்டாவது அலையில் அல்பா மாறுபாடு ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், பின்னர் டெல்டா, அதன் 4 பிறழ்வுகள் என தொற்று எண்ணிக்கையை சடுதியாக அதிகரித்துள்ளது.
88 மாதிரிகளில், 4 மாதிரிகள் மட்டுமே ஆல்பாவுக்கு நேர்மறை சோதனை செய்தன, மீதமுள்ள அனைத்தும் டெல்டா மாறுபாட்டிற்கு நேர்மறையானவை.
அண்மைய நாட்களில் தொற்றிற்குள்ளான 88 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் அதில் 4 மாதிரிகள் மட்டுமே அல்பா பிறழ்வாக அடையாளம் காணப்பட்டன. மிகுதி 84 மாதிரிகளும் டெல்டா பிறழ்வுகளே.
வரவிருக்கும் நாட்களில் இலங்கையில் நாளாந்தம் 6,000 இற்கும் அதிகமான தொற்றாளர்களும், 200 இற்கும் அதிக மரணங்களும் பதிவாகுமென மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
தற்போது, 800 இற்கும் அதிகமான நோயாளிகள் ஒட்சிசனை சார்ந்திருக்கிறார்கள். நாட்டிலுள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளும் இப்போது அதிக ஒட்சிசன் படுக்கைகளை அமைத்து வருகின்றன.
பல மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பியுள்ளன. இறந்தவர்களை தகனம் செய்ய நாள் முழுவதும் பல சுடுகாடுகள் செயல்படுகின்றன. மட்டக்களப்பில் உள்ள அடக்கம் செய்யப்படும் இடமும் வேகமாக நிறைந்து வருகிறது.
டெல்டா மாறுபாட்டால் ஏற்படும் தற்போதைய அனர்த்தம், மக்கள் தொகையில் பெரும் சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால்தான் தடுப்பூசிகளை விரைவாக வழங்க நடவடிக்கையெடுக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க பல மாவட்டங்களில் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நடமாடும் தடுப்பூசி திட்டத்தை சுகாதாரத்துறையும், இராணுவமும் இணைந்து முன்னெடுக்கிறது.
பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டத்தை தவிர்ப்பதன் மூலம், தொற்றை கட்டுப்படுத்த பங்களிக்க முடியுமென சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.



