ஆப்கானிஸ்தானின் ஹெராத் அருகே உள்ள பாட்ஜிஸ் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் ஹாஜி முல்லா அச்சாக்ஸாயை தலிபான்கள் புதன்கிழமை சுட்டுக்கொன்றனர்.
அவர் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை ட்விட்டரில் பரவிய ஒரு காணொளியில், அச்சாக்ஸாய் முழங்காலில் மண்டியிட வைப்பட்டு, தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை தலிபான்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
அச்சக்சாயை தனிப்பட்ட முறையில் அறிந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் நாசர் வசிரி, இந்த வீடியோ மற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் சிவில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த இராணுவ முக்கியஸ்தர்களில், தலிபான்களால் நீண்டகாலமாக குறிவைக்கப்பட்டிருந்தவர்களில் அச்சாக்ஸாயும் ஒருவர்.
“அவர் தலிபான்களால் சூழப்பட்டார், நேற்றிரவு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.
தலிபான்கள் அச்சாக்ஸாயை குறிவைத்தனர், ஏனெனில் அவர் ஒரு உயர் மட்ட உளவுத்துறை அதிகாரி.” என்று வசிரி கூறினார்.
நசீர் வசிரியும் மற்ற மூத்த ஆலோசகர்களும் சமீபத்தில் ஒரு ஒன்லைன் தனியார் சட்டிங் குரூப் ஒன்றை அமைத்திருந்தனர், அதில் சிவில் அரசாங்கத்துடன் பணிபுரிந்த 100 ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அடங்குவர் என்று வசிரி கூறினார். கவர்னர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த ஆலோசகர்கள், இந்த குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.
இந்த குழுவின் நோக்கம் ஒவ்வொரு தனிநபரின் இருப்பிடத்தையும் சரிபார்த்து, அவர்கள் பாதுகாப்பாகவும் தலிபான்கள் சென்றடையாதவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.
https://twitter.com/i/status/1428363829495271441
பாதுகாப்பாக இருக்க, அவர்கள் VPN கள் மூலம் குழுவை அணுகி, பின்னர் தங்கள் செய்திகளை நீக்குகிறார்கள் என்று வசிரி கூறுகிறார். தலிபான்கள் எங்கே, யாரை அடுத்து தாக்குவார்கள் என்பது பற்றிய தகவல்களும் அவர்களிடம் உள்ளன.
ஆப்கானிய உளவுத்துறை தரவுத்தளத்தை தலிபான்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் அரச, புலனாய்வு அதிகாரிகளின் தகவல், புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகள் மற்றும் தேசிய அடையாள ஆவணங்களை தலிபான்கள் பெற்றுவிட்டதாக வசிரி கூறினார். திங்கள் நிலவரப்படி அவர்கள் “வீடு வீடாக விசாரணைகளை” ஆரம்பித்தனர்.
வசிரியின் கூற்றுப்படி, முக்கியஸ்தர்களின் வீடுகளிற்கு சென்று, குடும்பங்களை அச்சுறுத்தி, தலைமறைவாக உள்ள பிரமுகர்கள் பற்றி தகவல்களை தலிபான்கள் பெறுகிறார்கள்.
இதனால், பல ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அகதிகள் உதவித் திட்டத்தின் தலைவர் ரெபேக்கா ஹெல்லர், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியதற்காக கடந்த இரண்டு நாட்களில் தலிபான்கள் ஐந்து மொழிபெயர்ப்பாளர்களைக் கொன்றதாக கூறினார்.
தலிபான்களின் கீழ் நாட்டில் நெருக்கடி அதிகரித்து, அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்று வசிரி எதிர்பார்க்கிறார்.
“ஆப்கானிஸ்தான் இப்போது மட்டுப்படுத்தப்பட்ட இணைய சேவையைக் கொண்டுள்ளது மற்றும் சில பகுதிகளுக்கு உணவு கிடைக்காததால் அனைத்து வங்கிகளும் இப்போது மூடப்பட்டுள்ளன” என்று வசிரி கூறினார்.
அறுபது வயதான ஜெனரல் ஹாஜி முல்லாஹ் அக்ஸாய் என்ற இந்த தளபதி சரணடைந்த பின்னர், அவரது கண்களை கட்டிவிட்டு, மண்டியிடச்செய்து சரமாரியாக அவர் மீது வேட்டுக்களை தீர்த்து படுகொலை செய்திருக்கிறார்கள் தலிபான் ஆயுததாரிகள்.

இவரைப்போல, ஆப்கானின் கிழக்கு பிரதேசத்திலுள்ள லக்மானின் முன்னாள் கவர்னர் அப்துல் வாலி வாஹிட்ஸாய் மற்றும் மாகாணத்தின் முன்னாள் காவல்துறைத் தலைவர் லோத்ஃபுல்லா கம்ராம் ஐந்து நாட்களுக்கு முன்பு தலிபான்களி டம் சரணடைந்தனர், ஆனால் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலையை எண்ணி உறவினர்கள் கலங்கியுள்ளனர்.

கஜினி மாகாண முன்னாள் காவல்துறைத் தலைவரான முகமது ஹஷேம் கால்ஜியையும் காணவில்லை.



