உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக 25 சந்தேகநபர்களிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் 23, 270 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய 3 நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரை, சட்டமா அதிபர் கோரியுள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷாங்க்ரிலா கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை விடுதி ஆகிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நௌபர் மௌவி உட்பட 25 சந்தேகநபர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சஜித் மௌலவி, முகமது மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பை என்றழைக்கப்படும் கபூர் மாமா, முகமது சன்சதீன் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்டவர்கள் மீதே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சதி, தயாரிப்பு, உதவி மற்றும் ஊக்குவித்தல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் சேகரிப்பு, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.