கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி, அரச உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் பாண்டிருப்பு – 02, திருப்பதி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த தியாகராஜா ஜெயகிருஷ்ணா (வயது 36) என்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரே மரணமடைந்தவராவார்.
மட்டக்களப்பு நொச்சிமுனைப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் பாண்டிருப்பில் திருமணம் முடித்து வசித்து வந்ததுடன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளர் சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார். நேற்று காலை வழமை போல் மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளது.
கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜெயகிருஷ்ணா, கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியநீலாவணை பொலிஸார் சடலத்தை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். கல்முனை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி பஹத் ஸமான் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டது. சாட்சியங்களும் மருத்துவ ஆதாரங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதன் அடிப்படையில், விபத்தினால் ஏற்பட்ட பலத்த தலைக்காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமாகி வெறும் 18 மாதங்களே ஆன நிலையில் இந்த அரச உத்தியோகத்தர் விபத்தில் பலியாகியுள்ளமை இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில்இ நல்லடக்கத்திற்காக சடலம் வெள்ளிக்கிழமை (17) காலை உறவினர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் நல்லடக்கம் பாண்டிருப்பு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து தொடர்பில் பெரியநீலாவணை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




