அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையின் புகழ்பெற்ற தேசிய கரப்பந்தாட்ட வீரரும் எனது நெருங்கிய நண்பரின் தகப்பனாருமான கதிரகேசு குணரட்ணம் காலமானார் எனும் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் வீரராக மாத்திரமின்றி கிராமப்புறங்களில் வாழ்ந்த திறமையான பல கரப்பந்தாட்ட வீரர்களுக்கு தேவையான பயிற்சிகளையும், வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்த அன்னார் சிறந்த குணவியல்வுகளை கொண்ட தேசிய விளையாட்டு வீரராவார். அன்னாரின் இழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், இவர் இலங்கையில் இருந்த காலத்தில் என்னுடன் நெருங்கிய உறவினை பேணியதுடன் பல சமூக நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் என்பதோடு கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்திருந்தார். இவரின் இழப்பால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



