அதிபர்கள், ஆசிரியர்கள் சாதாரண மக்களிற்கு வெறுப்பு ஏற்படாத வகையில் செயற்படுவோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில்,
இறைவன் திருப்பணிக்குச் சமனான பணியை மேற்கொள்ளும் நாம் சமூகத்தில் உயரிய அந்தஸ்து உள்ளவர்களாக இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ தற்போதைய சூழ்நிலையிலும் எங்களால் முடிந்ததை எதிர்கால சந்ததிக்காக வழங்கி க்கொண்டிருக்கிறோம்.
இன்று எம்மில் எண்பது வீதமானவர்களாக பெண் ஆசிரியர்கள் உள்ளதனை யாவரும் அறிவோம்.
அவர்களுக்கு இரட்டிப்பு சுமைகள் பெற்ற குழந்தைகளையும், நம்பி வந்த குழந்தைகளையும் சமமாக பார்க்கும் பக்குவம் அவர்களுக்கே உரித்தானது. அதிலும் தமிழ் பேசும் பெண் ஆசிரியர்கள் சமூகத்தில் உயரிய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்களா உள்ளனர் என்பதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலைகளால் அனைவருமே மரண பயத்தில் உள்ளனர். இச்சமயத்தில் ஆசிரியர்களிகிய நாமே அறிவு சார்ந்தவர்களாக பாமர மக்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள அனேக அரச அலுவலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.
இன்று மட்டும் நூற்று எழுபத்தேழு டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கல்வி அமைச்சு வறிய மாணவர்களுக்கு உருவாக்கிய கற்றல் வள நிலையம் கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரிகளின் நெருக்கீடுகள் அதிபர்கள் ஆசிரியர்களை மன உலைச்சல்களுக்கு உட்படுத்தியுள்ளது.
இத்தகைய நிலைகளில் ஒட்டு மொத்த மக்களும் ஆசிரியர்கள்மீது வசைபாட ஆரம்பித்துள்ளனர்.
இவற்றை நிவர்த்தி செய்ய கொறோனா அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சமூக முன்னோடிகளாக நடந்துகொள்வோம். சாதாரண மக்கள் மனதில் வெறுப்பு ஏற்படாதவகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
இவ்வாறு சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.