நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்தில் இருப்பதால் குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் கடற்கரைகளில் ஒன்றுகூடுவதை தவிர்த்து கொரோனா தொற்றிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாத்து இம்முறை ஆடி அமாவாசை தினமான (08.08.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று பிதுர் கடன்களை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச இந்துமத பீட சார்பாக கலாநிதி இராமசந்திர குருக்கள் பாபுசர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இந்துக்கள் தமது பிதுர் கடன்களை நிறைவேற்றுவதற்காக தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாதி மாத மஹாளய அமாவாசை ஆகிய மூன்று நாட்களும் மிகவும் பக்திபூர்வமாக பிதுர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களது வழித்தோன்றல்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம். தை மாத அமாவாசையில் பிதுர்கள் பூவுலகைவிட்டு செல்வதாகவும்,ஆடி அமாவாசையில் பூவுலகுக்கு வருவதாகவும், புரட்டாதி மாத மஹாளய அமாவாசையில் எல்லா பிதுர்களும் பூமிக்கு வருவதாகவும் கருதப்படுகின்றது. அந்தவகையில், வருடத்தில் உத்தராயணம்,தட்சநாயணம் என இரு அயனங்கள் காணப்படுகின்றன. வட அயனம் அதாவது உத்தராயண ம் தேவர்களுக்கு பகலாகவும் தட்சராயணம் இரவாகவும் இருக்கின்றது. ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். ஆடி அமாவாசையில் செய்யும் காரியம் பிதுர்களுக்கான இரவு போஷணம் எனக் கூறலாம். அமாவாசை தினங்களில் பொதுவாக புனித நீர் இருக்கும் இடங்களான ஆறுகள் , அருவிகள், குளங்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்களுக்கான எள்ளும் நீரும் நிறைத்து தர்ப்பணம் செய்வர். இந்நாளில் அந்தணர்களுக்கு தானம் கொடுப்பதும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதும் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதும் இந்துக்களால் பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்றன. அதேவேளை, சிவ ஆலய வழிபாட்டின்போது இறந்தவர்களை நினைத்து மோட்ஷ தீபமேற்றி வழிபடுவதும் வழக்கமாகும். மேலும், பிதுர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் அவர்களது பரம்பரை வளமாக, சந்ததிகள் சிறப்புற ஆசி கிடைக்குமெனவும் நோய்கள், துன்பங்கள், சாபங்கள் விலகுவதாகவும் கருதப்படுகின்றது. எனவே,தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையில் பிதுர் கடன்களை செய்து ஆலயங்களில் பிரார்த்தனைகள் மேற்கொள்வதும் சிறப்பாகும்.