நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை சட்ட வரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வணிக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில், நுண்நிதி தொடர்பான குறைகளிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஹொட்லைன்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் போது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட பல குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உத்தேச வரைபை விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற பிறகு இந்த வரைபு தற்போது சட்ட வரைவாளர் துறையில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
நுண்நிதி உட்பட பொதுமக்களுக்கு வழங்கப்படும் நியாயமற்ற கடன்களை ஒழுங்குபடுத்த அரசாங்கம் நம்புகிறது என்றார்.
புதிய ஹொட்லைன் மூலம் பெறப்பட்ட விவரங்களை அமைச்சுக்கு வழங்க நுண்நிதி நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளின்படி, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவதோடு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அமைச்சர் கூறினார்.




