மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட 17 இளைஞர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் உள்ள மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதிக்கு சென்ற பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தலைமையிலான சுகாதார குழுவினரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் விளையாட்டு நிகழ்வினை தடுத்து நிறுத்தியதுடன், விளையாட்டு நிகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கையினையும் விடுத்தனர்.
முகக்கவசங்கள் அணியாமலேயே நிகழ்வில் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறியவர்கள் பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாராவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் க.ரமேஸ் தெரிவித்தார்.




